தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க தொழிலதிபரான நாயகன் குகன் சக்கரவர்த்தியார், குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களால் மனம் உடைந்து கடற்கரையில் தனிமையில் அமர்ந்திருக்கிறார். அப்போது, தனது முன்னாள் காதலி தற்கொலை செய்ய முயற்சிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவளைக் காப்பாற்றுகிறார். அவளின் திருமண வாழ்க்கையும் தன்னுடைய வாழ்க்கையைப் போலவே துயரத்தில் இருப்பதை அறிந்த குகன், அவளின் வாழ்க்கையை மீட்டெடுக்க அவளுடன் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார். இதற்கிடையில், குகன் சக்கரவர்த்தியார் கொல்லப்பட்டதாக தகவல் வருகிறது. ஆனால், இறந்ததாக கூறப்படும் குகனே, தனது காதலிக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கிறார். இறந்த மனிதன் எப்படிப் பேச முடியும்? என்ற குழப்பத்தில் காதலி திகிலடைந்தாள். அதே நேரத்தில், குகன் சக்கரவர்த்தியாரும் “என்னை மிரட்டுவது யார்? என் காதலியை பயமுறுத்துவது யார்?” என்ற கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறார். இந்த மர்மத்தின் பின்னணி என்ன? அடுத்து நடப்பது என்ன? என்பதே படத்தின் மீதிக் கதை.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட 21 துறைகளில் தனி மனிதனாகப் பணியாற்றியுள்ள குகன் சக்கரவர்த்தியார், ஒவ்வொரு காட்சியிலும் தன் உள்ளத்தின் தீயை வெளிப்படுத்தியுள்ளார்.ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக ஆரம்பித்து, குடும்ப நாடகமாக மாறி, பின்னர் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாதையில் பயணிக்கும் திரைக்கதை, பல எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்களை குழப்பத்திலும், ஆர்வத்திலும் வைத்திருக்கிறது. நடிகராக கவனம் ஈர்க்கும் குகன், இயக்குநராகவும் பார்வையாளர்களை கட்டிப் போடுகிறார். “இது உண்மையிலேயே ஒரு திரைப்படமா?” என்று பல இடங்களில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் முயற்சி.
