பிளஸ் டூ வில் 96 சதவீதம்மதிப்பெண்கள் எடுத்து இன்ஜினியரிங் கல்லூரியில் சேரும் பிரதீப் ரங்கநாதன், கல்லூரியில் ரவுடித்தனம் செய்து கொண்டு டிராகன் என்ற அடைமொழியுடன், அனுபமா பரமேஸ்வரனை காதலித்துக் கொண்டு டான் ஆக திரிந்து இறுதியில் 48 அரியஸ் வைத்து வெளியில் வருகிறார். கல்லூரி முடிந்து இரண்டு ஆண்டுகளாக வேலைக்குப் போவதாக பெற்றோரிடம் பொய் சொல்லி விட்டு நண்பர்கள் கொடுக்கும் பணத்தில் ஜாலியாக வாழ்க்கையை நடத்தும் பிரதீப் ரங்கநாதன் காதலை அனுபமா பிரேக் அப் செய்துவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். தனது முன்னாள் காதலியின் கணவரை விட ஒரு ரூபாய் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் போலி சர்டிபிகேட் தயார் செய்து, போலி இன்டர்வியூ மூலமாக கவுதம் மேனனின் நிறுவனத்தில் பெரிய சம்பளத்திற்கு வேலைக்கு சேர்கிறார். வாழ்க்கையில் ஃபிராடுத்தனம் செய்து மேலே வந்த அவருக்கு பெரிய தொழிலதிபரான கே.எஸ்.ரவிக்குமார் தனது மகள் கயாடு லோகரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இந்த சூழ்நிலையில் இவர் செய்த பித்தலாட்டம், கல்லூரி முதல்வர் மிஸ்கினுக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு மிஸ்கின், பிரதீப்புக்கு ஒரு பொறுப்பைத் தருகிறார், அது என்ன? பிரதீப், கயாடு லோகர் திருமணம் நடந்ததா? பிரதீப் வேலை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
லவ் டுடே படத்துக்கு பிறகு பிரதீப் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ள இந்த படம், நிச்சயம் இளைஞர்,இளைஞிகளின் டிராகனாக மாறும். ஒரு கல்லூரி இளைஞன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கும் பிரதீப் ரங்கநாதன் உடல் மொழி மற்றும் அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. பழைய தனுஷை ஞாபகப்படுத்துகிறது.ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் சொன்னபடி தன்னுடைய முழு திறமையையும் காட்டி நடித்துள்ளார்.
அனுபமா பரமேஸ்வரன், காதலியாகவும் முன்னாள் காதலியாகவும் நடித்து கைத்தட்டல் பெறுகிறார். இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமான கயாடு லோகர் அழகான நடிப்பை தந்துள்ளார் என்று சொல்லலாம். கேமியோ ரோலில் இவானா, சினேகா வந்து சர்ப்ரைஸ் கொடுக்கின்றனர். இன்ஜினியரிங் கல்லூரி பிரின்ஸ்பல் ஆக நடித்துள்ள மிஷ்கின் ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதேபோல் ஆபீஸ் பாஸாக நடித்துள்ள கவுதம் மேனன், பாட்டு டான்ஸ் என பட்டையை கிளப்பியதுடன் ஸ்மார்ட்டான நடிப்பை தந்துள்ளார். பிரதீபின் அப்பாவாக நடித்துள்ள மரியம் ஜார்ஜ், நல்ல தந்தையாக மனதில் பதிகிறார். ஃபிரண்டாக வரும் வி.ஜே.சித்து, கே.எஸ். ரவிக்குமார், தேனப்பன், இந்துமதி ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளனர்.
ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த அஸ்வத் மாரிமுத்து இன்றைய இளைய தலைமுறையின் நாடியைப் பிடித்து படம் எடுத்துள்ளார். கல்லூரியில் ரவுடியிசம் செய்தால் மற்றவர்களுக்கு ஹீரோவாக தெரிவார்கள். ஆனால் கல்லூரி முடிந்து வெளியே வந்தால் அவர்கள் ஜீரோ என்பதை இக்கால இளைஞர்கள் தலையில் ஆணி அடிப்பது போல் அழகாக திரைக்கதையில் சொல்லி உள்ளார். ஃபோர்ஜரி செய்து டிகிரி வாங்கும் ஒருவரால், உண்மையில் அதற்கு தகுதியான, ஒருவர் வாழ்க்கை பறிக்கப்படுகிறது என்பதை பிரதீப் கேரக்டர் மூலமாக இயக்குனர் நியாயப்படுத்துகிறார். இதே தவறை யாரும் செய்யக் கூடாது என்று உணர்த்துகிறார்.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் சுமாராக ரசிக்க வைக்கிறது. குறிப்பாக எஸ்டிஆர் பாடிய ஏண்டி என்ன விட்டுப் போன… பாடல் வேற லெவல், பின்னணி இசையையும் மிரட்டலாக கொடுத்துள்ளார். அதேபோல் ஒளிப்பதிவாளர் நிகித் பூமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது. படம் முழுவதும் ஒரே டோனில் இருப்பதால் படம் ரசிகர்களை ரசிக்க வைக்கின்றன. தொடர்ந்து தவறான முடிவுகள் எடுத்தாலும் ராகவன் என்கிற டிராகனை நமக்கு பிடிக்க வைத்துவிட்டார் இயக்குனர். ராகவனாகவே மாறியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கீர்த்தியாக நன்றாக நடித்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். படம் ஜாலியாக சென்றாலும் வாழ்க்கை குறித்து நம்மை சீரியஸாக யோசிக்க வைக்கிறது. பாடல்களை படத்தில் திணிக்கவில்லை. அழகாக கதையோடு சேர்ந்தே வந்திருக்கிறது.
தற்போதுள்ள கல்லூரி மாணவர்களின் நிலையை கண்ணாடியில் பார்ப்பது போல் படம் பிடித்துள்ளது சிறப்பு. அதோடு ஜாலியான திரை கதையில் மெசேஜையும் சேர்த்து இளைஞர்களுக்கு சொல்லி இருப்பது நனன்றாக இருந்தாலும், எல்லோரையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்றி மேலே வர முடியும் என்ற லாஜிக் தான் இடிக்கிறது.இந்த திரைப்படம் அனைவருக்கும் பொதுவான ஒரு திரைப்படமாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, எனது கல்லூரி வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை தான் படமாக எடுத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். அப்படி என்றால் அஸ்வத் மாரிமுத்து கல்லூரியில் படிக்காத மாணவராக இருந்து இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. படிப்பதனால் அறிவு வளர்ந்துவிடாது. படிப்பிற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்பதை அஸ்வத் மாரிமுத்து தெளிவாக இந்த திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார்.
முதல் பாதி திரைக்கதையில் ஆங்காங்கே தேக்கம் தெரிகிறது. அவ்வளவு தவறு செய்த போதும் திருந்தாத ஒருவன் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தில் செட்டில் ஆகும் நேரத்தில் திருந்துவது வழக்கமான தமிழ் சினிமா பாணியில் உள்ளது. படத்தில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது.படத்தை இளசுகள் கொண்டாடி வருகின்றனர்.
