தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் !

இனி சொந்த காலிலேயே நின்று, தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான, ’சியாம்’ கூறியுள்ளது.

இது குறித்து, இந்த அமைப்பின் தலைவர், ராஜன் வதேரா கூறியுள்ளதாவது:வாகன துறையினர், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வரி குறைக்கப்படும் என, மிகவும் நம்பிக்கையோடு இருந்தனர். வாகனங்கள் மீதான, 28 சதவீத வரி, 18 சதவீதமாக குறைக்கப்படும் என, மிகவும் எதிர்பார்க்கப் பட்டது.ஆனால், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வாகனங்கள் மீதான வரியை குறைக்காத காரணத்தால், இனி சொந்தக் காலிலேயே நின்று, தேவையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்க வேண்டியது தான்.

வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கமானது, ஜி.எஸ்.டி.,யை, 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக குறைக்க கோரியதோடு மட்டுமின்றி, 10 முதல், 13 இருக்கைகள் கொண்ட வாகன பிரிவுக்கு, இழப்பீட்டு கூடுதல் வரியை நீக்குமாறும் கேட்டுக்கொண்டது. ஆனால், அரசு, 10 முதல், 13 இருக்கைகள் கொண்ட, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட வாகன பிரிவுக்கு மட்டும் இழப்பீட்டு கூடுதல் வரியை குறைத்து உள்ளது.எதிர்பார்த்தது போல அறிவிக்காவிடினும், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட வாகனப் பிரிவுக்கு மட்டும் வரியை குறைத்துள்ளது, ஒருபகுதி சாதகமான விஷயமே.

நம்பிக்கை நிதியமைச்சரின் சமீபத்திய தொடர்ச்சியான அறிவிப்புகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளது. இதன் காரணமாக, சந்தை வலுப்பெற்று, வருவாய் உயரும். இதன் பிறகு, வாகனங்கள் மீதான வரியை, அரசால் குறைக்க முடியும் என, நம்புகிறோம்.இதற்கிடையே வரும் பண்டிகை காலம், நுகர்வோரிடம், வாங்கும் எண்ணத்தை துாண்டுவதாக அமையும் என, நாங்கள் கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அண்மைக் காலமாக, வாகன விற்பனை, தொடர்ந்து சரிந்து வந்த காரணத்தினால், வாகன தயாரிப்பாளர்கள், ஜி.எஸ்.டி.,யை, 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என, அரசை வலியுறுத்தி வந்தனர்.வாகன தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும், வரி குறைப்பினை கோரி வந்தன.கூடவே, அனைத்து வாகன உதிரிபாகங்களுக்கும், ஒரே சீராக, 18 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரி வந்தனர்.தற்போது, 60 சதவீத வாகன உதிரிபாகங்களுக்கு, 18 சதவீத வரியும், மீதி, 40 சதவீத பாகங்களுக்கு, 28 சதவீத வரியும் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய நிறுவனங்களுக்கு, கார்ப்பரேட் வரியை, 15 சதவீதமாக குறைத்திருப்பது, வாகன துறையில், அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்ட முதலீடுகளுக்கு துணைபுரியும்.மேலும், வாகன துறையில், ‘மேக் இன் இந்தியா’வுக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

Related posts:

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மாரியப்பன் முத்தையா தயாரிப்பில் "பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் ப...

'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்' நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்!

சச்சின் டெண்டுல்கர், '800' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்!

மொத ராத்திரி: திரை விமர்சனம்!

ட்ராமா -விமர்சனம்!

Turkish Airlines Announces Flight Resumptions, Restoring Middle East Network !

ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026 – முதல் பதிப்பு !

கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது..!