திட்டமிட்டு வாழ்வதில் எக்ஸ்பெர்ட் அவர். எதையுமே பிளான் இல்லாமல் செய்யமாட்டார். அப்படி பிளான் செய்பவர்கள், பண விஷயத்திலும் உஷாராகவும் கறாராகவும் இருப்பார்கள். புது ஸ்கூட்டர் வாங்கும்போது, ‘‘ஆக்சஸரீஸ் வெளிமார்க்கெட்டில் ஃபிட் செஞ்சுக்கிட்டா, 800 ரூபா வரை லாபம் கிடைக்கும்’’ என்பதாக அவரின் திட்டமிடல் இருக்கும். அப்படிப்பட்டவரே, புது கார் வாங்கும்போது ஒரு விஷயத்தில் ஏமாந்து போயிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருந்தது.
இது யாரும் சிந்தித்திராத ஒரு விஷயம். ஆனால், சந்தித்தே ஆகக்கூடிய விஷயம். அது இன்ஷூரன்ஸ்.
ஆம்! கார் வாங்கும்போது இன்ஷூரன்ஸில்தான் எத்தனை ஏமாந்துவிட்டோம் என்பது, அவர் புது கார் வாங்கும்போதுதான் அவருக்குப் புரிந்தது. புதிய ஹேட்ச்பேக் கார் ஒன்றின் மிட் வேரியன்ட் மாடலை புக் செய்தபோது, அவர் போட்ட பட்ஜெட்டைவிடக் கையைக் கடித்தது. இத்தனைக்கும் கேஷ்பேக் ஆஃபர், பழைய காரின் எக்சேஞ்ஜ் ஆஃபர், நியூ இயர் ஆஃபர் என்று அத்தனை டிஸ்கவுன்ட்களையும் தாண்டி 16,000 ரூபாய் அவர் பட்ஜெட்டில் துண்டு விழுந்தது.
எப்படி என்று துருவித் துருவிப் பார்த்தபோதுதான், அந்த விஷயம் தெரிந்தது. பொதுவாக, டாக்டர்கள் – மெடிக்கல் ஷாப்களுடன் ஒப்பந்தம் வைத்துக்கொள்வதுபோல், கார் நிறுவனங்கள் – இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் டை-அப் வைத்துக் கொள்வது வாடிக்கை. ‘‘ABC இன்ஷூரன்ஸ் கம்பெனியிலேயே எடுத்துக்கலாம் சார். பம்பர் டு பம்பரே போட்டுடலாம்’’ என்று சொன்னபோது, வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டுவிட்டார். ஆனால், ஆன்லைனில் மற்ற நிறுவனங்களில் பிரீமியம் தொகையைத் தேடியபோது, ஒரு ஹேட்ச்பேக் காருக்கு பிரீமியம் தொகை 15,000 ரூபாய் முதல் குறைவாக வந்தது தெரியவந்தது. இந்தத் தொகையில் கை வைத்துத்தான் அவர்கள் கேஷ்பேக் ஆஃபர் என்று அள்ளிவிட்டு, இவர் தலையில் கட்டியது தெரியவந்தது. இதுகூடப் பரவாயில்லை; Bumper to Bumper என்று சொல்லி காம்ப்ரிஹென்ஸிவ் இன்ஷூரன்ஸைக் கட்டியதுதான் கொடுமை. இதனால், அந்த டீலருக்கு இன்ஷூரன்ஸில் மட்டும் கொழுத்த லாபம் என்றால், இது செடான், எஸ்யூவி போன்ற பெரிய வாகனங்களுக்கு எந்தளவு தொகை அதிகரிக்கும் என்பதை நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு சம்பவம் – நண்பர் ஒருவர் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி கார் புக் செய்தபோது நடந்த விஷயம் இது. ‘‘ஃபைனான்ஸியல் இயர் என்ட் சார். கரெக்டா வந்துருக்கீங்க… கூடுதலா 25,000 டிஸ்கவுன்ட் வாங்கித் தர்றேன்.’’ என்று கொட்டேஷன் போட்டுக் கொடுத்தார் சேல்ஸ்மேன். ஆன் ரோட்டில் இன்ஷூரன்ஸ் தொகையாக 57,000 ரூபாய் இருந்தது. நண்பரும் ஒரு உஷார் பார்ட்டிதான். சரசரவென ‘பாலிஸி பஜார்’ ஆன்லைனில் தேடிப் பார்த்தபோது, வெவ்வேறு நிறுவனங்களில் ரூபாய் 20,000 முதல் 25,000 வரை குறைவாக இருப்பது தெரியவந்தது.
‘‘இன்ஷூரன்ஸ் தவிர்த்து ஆன் ரோடு விலை மட்டும் சொல்லுங்க. நாங்க வெளியே இன்ஷூரன்ஸ் வாங்கிக்கிறோம்’’ என்றபோது, ஷாக் ஆன சேல்ஸ்மேன், தடாலடியாகச் சொன்னார்: ‘‘அப்போ உங்களுக்கு 25,000 கூடுதல் கேஷ்பேக் ஆஃபர் வராது சார். நாங்க சொல்ற கம்பெனியில இன்ஷூரன்ஸ் எடுத்தா மட்டும்தான் இந்த ஆஃபர்’’ என்று ஓர் அதிரடிச் செய்தி சொன்னார்.
இப்படி கார் வாங்கும் அனைவருமே இன்ஷூரன்ஸ் விஷயத்தில் ஏமாறுகிறார்களா என்றால்… ஆம்!
சரி; இதிலிருந்து எப்படித் தப்பிப்பது?
ஒரு காரின் எக்ஸ் ஷோரூம் விலை என்பது ரோடு டாக்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன், இன்ஷூரன்ஸ் போன்றவை இல்லாமல் காரின் தயாரிப்பு விலையை மட்டும் சொல்லும் விலை. இதை நீங்கள் சாலையில் பயன்படுத்த சில வரிகளெல்லாம் சேர்ந்ததுதான் ஆன்ரோடு விலை. இதில் இன்ஷூரன்ஸ் என்பது, கார் வாங்கும் ஷோரூமில்தான் எடுக்க வேண்டும் என்பது விதி இல்லை. நீங்கள் விரும்பும் தனிப்பட்ட நிறுவனங்களில்கூட காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். அல்லது வேறு நிறுவனங்களின் பாலிஸி விலைக்கு டீலர் பரிந்துரைக்கும் இன்ஷூரன்ஸ் பாலிஸியை பேரம் பேசலாம். வாடிக்கையாளர்களுக்கு அலைச்சல், நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகத்தான் ஷோரூம்களே இந்த ஆப்ஷனை வைத்துள்ளன. ஆனால், இந்த இன்ஷூரன்ஸ் தொகையில்தான் மிகப் பெரிய தொகை ஷோரூம்களுக்கு லாபமாகக் கிடைக்கிறது என்பதுதான் உண்மை.
ஏழு லட்சம் ரூபாய் விலையுள்ள ஒரு காருக்கு 25,000 ரூபாய் 35,000 வரை இன்ஷூரன்ஸ் தொகை ஷோரூமில் காட்டுவார்கள். இதுவே நீங்கள் தனிப்பட்ட முறையில் விசாரித்தோ, ஆன்லைனில் தேடிப் பார்த்தாலோ, 20,000 ரூபாய் வரைதான் இன்ஷூரன்ஸ் தொகை இருக்கும். ஷோரூம்கள் டை-அப் வைத்துள்ள காப்பீட்டு நிறுவனங்களில் இதை எடுக்கும்போது, அந்த 15,000 ரூபாயும் சந்தேகமின்றி டீலர்களுக்குத்தான். இதிலிருந்து போனா போகட்டும் என்றுதான் டீலர்கள் உங்களுக்கு கூடுதலாக சில தள்ளுபடிகள் தரலாம். எனவே, தயக்கமின்றி, ‘இன்ஷூரன்ஸை நானே பார்த்துக்கொள்கிறேன்’ என்று டீலர்களிடம் பேரம் பேசிவிடுங்கள். ‘கேஷ் ஆஃபர் தரமாட்டேன்’ என்று சொல்ல அவர்களுக்கு உரிமை கிடையாது.
நீங்கள் காரை சர்வீஸ் விடப்போகும் சர்வீஸ் சென்டரில் எந்த இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு ‘கேஷ் லெஸ்’ சர்வீஸ் வசதி இருக்கிறது என்று விசாரித்து அந்த இன்ஷூரன்ஸ் கம்பெனியில் இன்சூரன்ஸ் எடுப்பது நல்லது. இல்லை என்றால் நாளை இன்ஷூரன்ஸ் கிளெய்ம் சர்வீஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும்போது, முதலில் நாம் கையிலிருந்து வொர்க்ஷாப் பில்லை கட்டிவிட்டு அதைக் காட்டி இன்ஷூரன்ஸ் கிளெய்ம் வாங்க வேண்டியிருக்கும்.
அடுத்ததாக, நீங்கள் எடுப்பது ‘பம்பர் டு பம்பர்’ பாலிசியா அல்லது காம்ப்ரிஹென்ஸிவ் பாலிஸியாக என்பதை உறுதி செய்துகொண்டு அதற்கு தகுந்த பிரீமியத்தைச் செலுத்த வேண்டும்.
இன்ஷூரன்ஸ் விஷயத்தில் தைரியமாகப் பேசுங்கள். ஏனென்றால், பணமும் வாகனமும் உங்களுடையது.
