“மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தலின்படி, பொதுத்துறை வங்கிகளின் கடன் வழங்கும் முகாம்கள் மூலம் அக்டோபர் முதல் தேதியில் இருந்து 9-ம் தேதிவரை 81,700 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது.தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்குதல் போன்றவற்றுக்கு கடன் வழங்க முகாம்கள் நடத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
பணம் தேவைப்படுபவர்களுக்கு கடன் கொடுத்து பணப்புழக்கம் ஏற்படுத்தக்கூடிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை வங்கிகள் அடையாளம் கண்டுள்ளன. இந்த நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் தேவைப்படும் பொதுமக்களுடன் 400 மாவட்டங்களில் கடன் முகாம்கள் நடத்த பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கடன் முகாம்கள் 2 தவணையாக நடத்தப்படும்.தீபாவளி பண்டிகை வருவதால், பண்டிகை செலவுகள், வீடு வாங்குதல், வேளாண்மை, சிறு, குறு நிறுவனங்கள், சில்லரை செலவுகள் போன்றவற்றுக்கு பணம் தேவைப்படுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த திட்டத்தின் மூலம் பொதுத்துறை வங்கிகள் மூலம் இம்மாதம் முதல் தேதியில் இருந்து 9-ம் தேதி வரை 81 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.மேற்கண்ட தொகையில் 34 ஆயிரத்து 342 கோடி ரூபாய் பதிய நபர்களுக்கு அளிக்கப்பட்ட கடனாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.