“தமிழகத்தில் சொத்து வரி உயர்வு ரத்து ! உள்ளாட்சி தேர்தல் பயமா?

“தமிழகத்தில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், உரிமையாளர்கள் பழைய வரியை செலுத்தினால் போதும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.சென்னை உள்பட அனைத்து நகரங்களுக்கும் சொத்து வரி கடந்த வருடம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் உள்ள சொத்துக்களின் வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. சொத்து வரி உயர்த்தப்பட்டதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, உயர்த்தப்பட்ட சொத்து வரி குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுபற்றி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையிலான இந்த குழுவில், நகராட்சி நிர்வாக ஆணையர், பேருராட்சி இயக்குநர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்கும் வரை, பழைய சொத்து வரியே வசூலிக்கப்படும். சொத்து உரிமையாளர்கள் 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு முந்தைய சொத்து வரியை செலுத்தினால் போதும்.

உயர்த்தப்பட்ட விகிதத்தின்படி சொத்து வரி செலுத்தியவர்களுக்கு, கூடுதலாக செலுத்தப்பட்ட வரித்தொகையானது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஈடு செய்யப்படும். 1998-க்குப் பிறகு மாநகராட்சி மற்றும் நகாட்சிகளில் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை.சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதற்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.