இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் தங்கத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது எப்படி?
கடந்த ஓராண்டாக சிறப்பாக செயல்பட்டு வரும் திட்டங்களில், தங்க ஈ.டி.எப்., திட்டமும் ஒன்றாகும். கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை இந்த திட்டத்தில், 2,414 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ’ஆம்பி’ வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இத்திட்டத்தில் ஏப்ரல்
மாதத்தில், 731 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவே, இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 195 கோடி ரூபாய் இந்த திட்டத்திலிருந்து வெளியேறியுள்ளது.இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த, 2011ம் ஆண்டிலிருந்தே இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மிகவும் பாதுகாப்பான இந்த திட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா பாதிப்புகளையும் மீறி அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு முக்கிய காரணம், பிற நிதி சந்தைகள் மற்றும் திட்டங்களில் கடுமையான ஏற்ற தாழ்வுகள் காணப்பட்டது. இந்நிலையில், மிகவும் பாதுகாப்பான முதலீடாக தங்கம்
கருதப்பட்டதால், தங்க ஈ.டி.எப்., திட்டங்களில் அதிக முதலீடு வந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக, பொருளாதார சரிவுகள் ஏற்படும் காலங்களிலும், கோவிட்-19 போன்ற கொள்ளை நோய்களால் உருவாகும் நெருக்கடி காலங்களிலும் மக்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்புவது வழக்கம். இச்சமயங்களில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என பலர் கருதுகின்றனர்.
நெருக்கடி காலங்களில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதால் தங்கம் விலை உயர்வது வழக்கம். இச்சமயத்தில் பங்குச் சந்தையை காட்டிலும் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. பெருவாரியான மக்களுக்கு தங்கம் என்றால் நகைகள் மட்டுமே நினைவுக்கு வருகிறதே தவிர அதனால் கிடைக்கக்கூடிய லாபம் தெரிவதில்லை.
தங்கம் என்றால் செய்கூலி, சேதாரம் என இழப்புதானே ஏற்படும்? இதனால் என்ன லாபம் வரப்போகிறது என பலரும் கேட்கலாம். மத்திய அரசின் தங்கப் பத்திரத் திட்டத்தின் (Sovereign gold bond scheme) கீழ் தங்கப் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இத்திட்டத்தில், தங்கத்திற்கான விலை முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். கூடுதலாக செய்கூலி, சேதாரம் என எதுவும் கிடையாது. ஆகவே, இப்பத்திரங்களில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம்.
தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 விழுக்காடு வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி வாயிலாக வருமானம் ஈட்டிக்கொள்ளலாம். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4449 ஆகும். ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.4658 ஆகும். விலை ஏற ஏற வட்டி வாயிலாக லாபமும் அதிகரிக்கும்.
தங்கப் பத்திரங்களை வாங்கி எட்டு ஆண்டுகள் வைத்திருக்கலாம். எட்டு ஆண்டுகள் முடிந்தப்பின்னர் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை. எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது என்றாலும், அவசர தேவை ஏற்பட்டாலும் ஐந்து ஆண்டுகளுக்கு பின் பத்திரத்தை விற்று பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அச்சமயத்தில் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். தங்கப் பத்திரம் என்பது கிட்டத்தட்ட தங்கத்தை போன்றதுதான். இந்தப் பத்திரத்தை வங்கியில் அடகு வைத்தும் கடன் பெறலாம்.கொரோனா பாதிப்புகளுக்கிடையேயும் , கடந்த ஏப்ரல் மாதத்தில், 731 கோடி ரூபாய் அளவுக்கு, தங்க ஈ.டி.எப்., திட்டத்தில் முதலீடுகள் வந்துள்ளன.