கும்பல் படுகொலைக்கு எதிராக பேசியவர்கள் மீது FIR ! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம் !

நாட்டில் அதிகரித்து வரும் கும்பல் படுகொலைக்கு எதிராக தங்களுடைய அக்கறையை வெளிப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த மடல் எழுதிய 50 பிரபலங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிந்துள்ளதாக வந்துள்ள செய்தி குறித்து தன்னுடைய அதிர்ச்சியையும் கோபத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.அபுபக்கர் வெளிப்படுத்தியுள்ளார். பிரபலங்களுக்கு எதிராக தேச விரோத செயல், பொதுமக்களுக்கு இடையூறு, மத உணர்வுகளை காயப்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தெளிவாக மக்களை அச்சுறுத்தும் நோக்கில் சட்டத்தை கேலிக்கூத்தாக்கி சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் நிகழ்வாகும்.

சுதந்திரமாக பேசுவது, எதிர் கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையை பாதுகாப்பது, சிறுபான்மை மற்றும் தலித்களுக்கு எதிரான வன்முறை குறித்து கேள்வி எழுப்புவது போன்றவை இப்போது நாட்டில் குற்றங்களாக கருதப்படும் நிலை கோபத்தை ஏற்படுத்துகின்றது. பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளூர் வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதி நீதியை திரிக்கும் போக்கை கொண்டிருக்க வேண்டும் அல்லது நாட்டில் உள்ள யதார்த்த சூழல்களுடன் தொடர்பை இழந்தவராக இருந்திருக்க வேண்டும். நாட்டில் நடந்து வரும் கும்பல் படுகொலை குறித்து உச்சநீதிமன்றமே தன்னுடைய கவலையை வெளிப்படுத்தி அதற்கு எதிரான சட்டங்களை நிறைவேற்ற அறிவுறுத்தியுள்ளது.

வழக்கு பதியப்பட்டுள்ள பிரபலங்களுக்கு தன்னுடைய ஆதரவை பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் வெளிப்படுத்தியதுடன், நாட்டு குடிமக்கள் தங்களுக்கு விருப்பமானதை பேசும் உரிமையை பாதுகாப்பதில் இயக்கம் எப்போதும் துணைநிற்கும் என்ற உறுதியையும் அளித்துள்ளார்.