கார்ப்பரேட்டுகளின் கூடாரமாகும் அரசியல் கட்சிகள் !

தொண்டர்களை மட்டுமே நம்பி களத்தை சந்தித்து பழகிய அரசியல் கட்சிகள், இப்போ வியூக வகுப்பு நிறுவனங்களை நம்பியே களம் இறங்குகிறது. அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுதுங்கிற காலம் போய், அரசியல் கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாகவும், தங்களது கட்சியை அடமானம் வைக்கும் இடமாகவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மாறி வருது.. அந்த வகையில், வருகிற 2024 மக்களவை தேர்தல் போட்டி, இரு பெரும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளான, அதாவது; பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக விமர்சிக்கப்படும் பிரஷாந்த் கிஷோர் அப்புறம் காங்கிரஸுக்கு பணியாற்ற அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள சுனில் கனுகோலுவுக்கும் இடையேயானதாக பார்க்கப்படுது.

2024 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழுவில் தேர்தல் உத்தி வகுப்பாளர் சுனில் கனுகோலு இடம்பெற்றுள்ளதன் மூலம் அக்கட்சியின் தேர்தல் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளது அதிகாரப் பூர்வமாக தெரியவந்திருக்குது..

முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இணைய பிரபல தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் மறுப்பு தெரிவிச்சிட்டதுனால, அக்கட்சிக்காக 2024 மக்களவை தேர்தலுக்கு அவர் பணியாற்றக் கூடும் என்ற யூகங்களுக்கு காங்கிரஸ் அமைத்துள்ள குழு முற்றுப்புள்ளி வைச்சிருக்குது. காங்கிரஸ் பணிக்குழுவில் தேர்தல் உத்தி வகுப்பாளர் சுனில் கனுகோலு இடம்பெற்றுள்ளதன் மூலம் அக்கட்சியின் தேர்தல் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளது உறுதியாகியிருக்குது. தன் தலைமையிலான ஒரு நபர் பணிக்குழுவை பி.கே., விரும்பியதாக கூறப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமாக அவரை புறந்தள்ளிய காங்கிரஸ் சுனிலுடன் கைகோர்த்துள்ளதாக கூறப்படுது.

காங்கிரஸ் தொடர் தோல்விகளால் தத்தளித்து வரும் நிலையில், 2024 மக்களவைத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை அக்கட்சி மேலிடம் எடுத்து வருது. அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்றது. அதுக்கப்புறம், 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு அரசியல் விவகாரங்கள் குழு, task force எனும் பணிக்குழு, பாதயாத்திரையை ஒருங்கிணைக்கும் மத்திய திட்டமிடல் குழுன்னு பல குழுக்களை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அமைச்சிருக்காரு. குறிப்பா, பணிக்குழுவில் தேர்தல் உத்தியாளர் சுனில் கனுகோலுவின் பெயர் இடம் பெற்றுள்ளது எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரபல தேர்தல் உத்தியாளராக பிரஷாந்த் கிஷோர் அறியப்பட்டாலும், அவர் எப்போதும் வெற்றி பெறும் கட்சின் பக்கம் சேர்ந்து கொள்வாருங்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்படுது கடந்த இரண்டு தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. இயல்பாகவே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பின்னர் ஒரு கட்சி மீது அதிருப்தி எழுவது வழக்கம். அதுதவிர, பணவீக்கம், விலையேற்றம், பொருளாதார சரிவு, வரலாறு காணாத பெட்ரோல்-டீசல் விலை உயர்வுன்னு பாஜக மேல அதிருப்தி வரிசை கட்டி நிற்கிற நிலையில், பாஜக அல்லாத அணி ஜெயிக்கும் சூழல் உருவாகியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சொல்லிக்கிட்டே வர்றாங்க.. அதற்கு வலுசேர்க்கும் மாதிரி, எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் கட்சியுடன் பலகட்ட பேச்சுவார்த்தையை பிரஷாந்த் கிஷோர் நடத்தினார். கட்சியை பலப்படுத்துவது, தேர்தல் செயல்திட்டம் என்பது உள்ளிட்ட சில செயல்விளக்கங்களையும் காங்கிரஸ் கட்சிக்காக பி.கே. அளிச்சிருந்தாரு. ஆனால், அது எதுவுமே பி.கே.வுக்கு கைகூடலை.

அதனால் வெறுத்துப் போன பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியையும், அது செயல்படும் விதத்தையும் தொடர்ந்து விமர்சிச்சிட்டு வந்தாரு. சிறிது காலம் எதுவும் பேசாமல் இருந்தார். இப்போ, மீண்டும் விமர்சிக்கத் தொடங்கியிருக்காரு. இதுக்கிடைல, மம்தாவுடன் கைகோர்த்தபின்னாடியும், காங்கிரஸை விமர்சிச்சுக்கிட்டுதான் வந்தாரு. அண்மையில் நடைபெற்ற காங்கிர்ஸ் உடனான பேச்சுவார்த்தை கைகூடாமல் போனதும், மறுபடியும் காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை பிரஷாந்த் கிஷோர் எடுத்துள்ளதாகச் சொல்றாங்க டெல்லி அரசியலை அறிந்த அரசியல் விமர்சகர்கள். “இன்னும் 20-30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும்; பாஜகவின் சரிவானது அடுத்த 5 அல்லது 10 வருடங்களுக்குள் நடைபெறாது”ங்கிற அவரது பேச்சை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், பொதுத்தளத்தில் இருந்துகிட்டு இதுபோல அவர் பேசுவது பாஜகவுக்கு வலு சேர்க்கும். இத்தகைய பேச்சுகள் மூலம், பாஜகவுக்கு ஆதரவாக மக்களை தயார்படுத்தும் வேலையை மறைமுகமா பிரஷாந்த் கிஷோர் செய்கிறார். இதுவும் ஒருவிதமான கருத்து திணிப்பேங்கிறாங்க.இந்த பின்னணியில்,தான் தேர்தல் ஆலோசகர் சுனில் கனுகோலுவை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்துள்ளது. இவர் வேறு யாரும் இல்லை பி.கே. உடன் இணைந்து பணியாற்றியவர். பிரசாந்த் கிஷோரும் சுனிலும் ஒரு காலத்தில் அமெரிக்காவில் வெவ்வேறு இடங்களில் பணியாற்றியவர்கள். 2014 தேர்தலில் மோடியை பிரதமராக அரியணை ஏற்றியதில் சுனிலுக்கும் முக்கிய பங்குண்டு. ‘அடுத்த பிரதமர்’ என்ற பிம்பத்தை மோடி மீது மெல்லமெல்ல பி.கே., கட்டமைத்தபோது, அவரது அணியில் இருந்தவர்தான் இந்த சுனில் கனுகோலு. 2024 மக்களவை தேர்தலுக்காக சுனிலுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்திருந்தாலும், முதற்கட்டமாக 2023ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் வியூகப் பணிகள் சுனிலுக்கு கொடுக்கப்படவுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் சொல்லுது.

கடந்த 2015ஆம் ஆண்டில் பிரஷாந்த் கிஷோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது ஐபேக் நிறுவனத்தில் இருந்து விலகி தனி நிறுவனத்தை ஆரம்பித்த சுனில் கனுகோலு, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலினுக்காக பணியாற்றினார். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெறாத போதும், சுனிலை கூடவே வைத்து கொண்டது திமுக.2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றிக்காக வேலை செய்தார் சுனில் கனுகோலு. ஆனால், 2019 வெற்றிக்குப் பிறகு ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும் சுனிலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், திமுகவுக்கு குட்பை சொல்லி விட்டு கிளம்பினார் சுனில்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஸ்டாலினுக்காக சுனில் வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூகங்கள், ஜெயலலிதாவையே உற்றுநோக்க வைத்ததாகச் சொல்வார்கள். ‘விடியட்டும்.. முடியட்டும்’, ‘நமக்கு நாமே’ உள்ளிட்டவைகள் சுனிலின் ஐடியாக்களே. எனவே, திமுகவில் இருந்து வெளியேறிய சுனிலை தன் பக்கம் வளைத்தது எடப்பாடி டீம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வியூகம் வகுக்க களம் இறங்கியது சுனில் டீம். அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறா விட்டாலும், அக்கட்சிக்கு 65 இடங்கள் மொத்தமா கிடைச்சதுக்கு சுனில் கனுகோலுதான் முக்கிய காரணம்.