இந்தியாவில் களமிறங்கும் சீன பேட்டரி ஸ்கூட்டர் !

சீனாவை சேர்ந்த டொவ் இ.வி. டெக் நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சீனாவில் பிரபலமாகத் திகழும் டொவ் இ.வி.டெக் நிறுவனம் இந்தியாவில் தனது பேட்டரி ஸ்கூட்டர்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற பேட்டரி வாகன தொழில்நுட்ப கண்காட்சியில் இந்நிறுவன தயாரிப்பான பேட்டரி ஸ்கூட்டர்கள் இடம்பெற்றிருந்தன.

இதில் மிகவும் மேம்பட்ட எல்.எஃப்.பி. பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் மோதல் தடுப்பு பாதுகாப்பு வசதி உள்ளது. தானியங்கி முறை, ரிவர்ஸ் பார்க்கிங் வசதி, அவசர கால மீட்பு வசதி, ஸ்மார்ட் லைட் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாக இந்த ஸ்கூட்டர் விளங்குகிறது.

இதில் 15 கிலோவாட் பி.எல்.டி.சி. மோட்டாரானது 72 வோல்ட் மின்சாரம் கொண்ட பேட்டரியில் இயங்கக் கூடியது. எகானமி மோடில் இது மணிக்கு 38 கி.மீ. வேகத்திலும் ஸ்போர்ட் மோடில் 45 கி.மீ. வேகத்திலும் செல்லக் கூடியது. இந்த ஸ்கூட்டரை தினசரி பயன்படுத்தும்போது வாகனம் பற்றிய அனைத்து விவரங்களும் உங்களது ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும்.

முதல் கட்டமாக தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பின்னர் படிப்படியாக பிற மாநிலங்களுக்கு இந்த ஸ்கூட்டரை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.