ஸ்டாலினின் கரங்களை விட்டு விலகுகிறதா இஸ்லாமிய வாக்கு வங்கி?! ஏன்? எப்படி? ஒரு பரபர அலசல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு வழக்கம்போல் முழுமையான ஆதரவினை இஸ்லாமியர்கள் வழங்குவார்களா?

கர்நாடகாவில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ‘ஹிஜாப்’ விவகாரத்துக்கு எதிராக தமிழகத்தில் முஸ்லீம் அமைப்புகள் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்பாட்டம் நடத்திட திட்டமிட்டன. ஆனால் அதன் பின் ‘தமிழகத்தை ஆள்வது தி.மு.க. அரசு. இது சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கும் அரசு. நாம் போராட்டம் நடத்த, அதை எதிர்த்து வேறு சிலர் குரல் கொடுக்க துவங்கினால் விவகாரம் வேறு மாதிரி போக துவங்கலாம். அது சட்ட ஒழுங்குக்கு சிக்கல் தந்து அரசுக்கு சிரமம் உருவாகிட கூடாது. அதனால் பொறுமை காப்போம்.’ என்று முடிவெடுத்து அமைதியாகினர்.
இதுதான் இதுவேதான் தி.மு.க. மீது சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அதற்கு காரணம், கடந்த காலங்களில் அவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்காக குரல் கொடுத்த மிக முக்கிய இயக்கங்களில் முதன்மையானது திராவிட முன்னேற்ற கழகம்தான். கருணாநிதி அந்தளவுக்கு மிக நுணுக்கமாக இஸ்லாமிய மக்களுக்கு தன் ஆதரவையும், தோள்கொடுப்பையும் வழங்கியிருந்தார்.
அவருக்குப் பின் ஸ்டாலினும் கூட கடந்த இரு வருடங்களுக்கு முன் குடியுரிமை சட்டம் தேசத்தில் அமலாக்கப்பட்ட போது, அதற்கு எதிராக வன்மையாக குரல் கொடுத்து இஸ்லாமிய மக்களின் தோழனாக தன்னை அழுத்தமாக வலியுறுத்திக் கொண்டார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. கூட்டணிக்கு மிக மிக பெரிய அளவில் தங்களின் சப்போர்ட்டை வழங்கியிருந்தனர் இஸ்லாமியர்கள். அக்கட்சி முரட்டு மெஜாரிட்டிடன் ஆட்சி அமைத்திட அவர்களும் ஒரு காரணமே என்பதில் இரண்டாம் கருத்தே கிடையாது. இந்நிலையில், தற்போது நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு வழக்கம்போல் முழுமையான ஆதரவினை இஸ்லாமியர்கள் வழங்குவார்களா? எனும் கேள்வியினை எழுப்பியுள்ளனர் அரசியல் பார்வையாளர்கள். ’அதிலென்ன சந்தேகம்?’ என்று கேட்டபோது விளக்க துவங்கியவர்கள்….
“இம்முறை தி.மு.க. ஆட்சி அமைந்த பின் நிர்வாகத்தின் இயல்பான போக்கில் அரசு எடுத்த முடிவில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு சிறு சிறு அதிருப்திகள் ஏற்பட்டன. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறைவாசிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி, முன்கூட்டியே விடுதலை செய்திட திட்டமிட்ட அரசு, கணிசமான சிறைவாசிகளை தேர்வு செய்து அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அதில் இஸ்லாமிய கைதிகளின் எண்ணிக்கை மிக மிக மிக சொற்பம். இதில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு பெரும் வருத்தம். குறிப்பாக கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பல வருடங்கள் சிறையிலேயே இருக்கின்ற, இத்தனைக்கும் அந்த வழக்கில் மிக சாதாரண குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விடுதலையாவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு ஏமாந்து போனார்கள். அதில் தங்களின் அதிருப்தியையும், கோபத்தையும் அரசுக்கு எதிராக ஓப்பனாகவே காட்டினர் தமிழகமெங்கும்.
இந்நிலையில் வழக்கமாக தி.மு.க. கூட்டணியிலிருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இம்முறையும் அக்கூட்டணியில் தொடர்ந்தாலும் கூட கடும் அதிருப்தியில் இருக்கிறது தொகுதிப் பங்கீடு விஷயத்தில். அதேவேளையில் திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட்டு, தி.மு.க.வை அதிர வைத்துள்ளது.
ஸ்டாலினின் நட்பு வட்டாரத்தில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியும் இந்த உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீட்டில் கடும் அதிருப்தி. சென்னை மாநகராட்சியில் ஒரே ஒரு வார்டு ஒதுக்கப்பட்டதில் கண் சிவந்துவிட்டனர். பல நகராட்சி, பேரூராட்சிகளில் சுயேட்சையாக இக்கட்சியினர் நின்று, தி.மு.க. கூட்டணிக்கு குடைச்சல் தருகின்றனர்.
இந்திய தேசிய லீக் கட்சியோ தாங்கள் போட்டியிடாத இடங்களில் மட்டும் தி.மு.க.வுக்கு ஆதரவு என்றும் மற்ற இடங்களில் அப்படி முடியாது என்றும் அறிவித்துள்ளனர். அதேப்போல் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியோ அ.ம.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கிறது. இப்படி இஸ்லாமிய கட்சிகளும், அமைப்புகளும் தி.மு.க.வுக்கு எதிரான திசை அல்லது வேறு திசையில் நிற்பதை இந்த தேர்தலில் காண முடிகிறது. இதனால் கடந்த சட்டமன்ற தேர்தல் போல் இத்தேர்தலில் தி.மு.க. தாறுமாறான ஹிட்டடிக்குமா? என்பது டவுட்டே.” என்கிறார்கள்.
ஆனால் இக்கருத்தை கடுமையாக மறுக்கும் தி.மு.க.வினர் “ஏகப்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் உள்ளன. அவற்றில் 90% எங்களுக்கு ஆதரவான நிலைப்பாடில்தான் எப்பவும், இப்பவும் உள்ளனர். சிலர் கருத்து மாறுபட்டு நிற்பதுதான் அரசியல். கடந்த சட்டசபை தேர்தலிலும் அவர்கள் அப்படித்தான் இருந்தனர். அதனால் நாங்கள் ஒன்றும் நட்டப்படவில்லையே. இஸ்லாமிய மக்கள் எங்களை பெருவாரியாக ஆதரித்தனர். அதுதான் இப்பவும் நடக்கும்.” என்கிறார்கள்.