திமுகவுக்கு பல வழியில பாஜக செக் வைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதுன்னு சொல்றாங்க.. விரைவில் அடுத்தடுத்த தேர்தல்கள் நடக்க இருக்கிற நிலையில், பாஜகவின் இந்த அதிரடிகள் தமிழக அரசியலை பரபரப்பாக்கிட்டு வருது. இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், இரண்டு கட்சித்தலைவர்களும் பாசமா இருக்காங்களாமங்கிறது உறுதியாக தெரியலை.. இதுக்கிடையில எல்.முருகனுக்கு ராஜ்யசபா சீட் கேட்டும் அதிமுக குடுக்கலை.இதுல வேற பாஜகவை கூட்டணியில் சேர்த்ததுதான் தங்களுக்கு ஒரு மைனஸ்னு அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்டத்தலைவர்களெல்லாம் மேடைக்கு மேடை பேசுனாங்க. எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கிறதுனாலும், தங்கள் இருப்பிடத்தை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அதிமுகவை சூழ்ந்து உள்ளது.. சசிகலா நெருக்கடி, இரட்டை தலைமை விவகாரம், ஊழல் புகார்கள் என அதிமுக அடுத்தடுத்து சிக்கல்களில் சிக்கிக்கிட்டதால அதை சமாளிக்கவே அந்த கட்சிக்கு நேரம் பத்தலை. அதேநேரத்தில் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக அவ்வளவாக தலையிடவும் விரும்பலை… நடப்பதையெல்லாம் ஒதுங்கி நின்றே வேடிக்கை பார்த்து வருகிறது.. இதற்கு ஒரு காரணமும் இருக்குங்கிறாங்க.என்னன்னா தமிழக பாஜக அடிக்கடி ஒரு விஷயத்தை சொல்லி கிட்டே இருக்குது.. அதாவது தமிழ்நாட்டில் இனிமேல் திமுகவுக்கு மாற்று பாஜகதான்.. திமுக Vs பாஜக என்ற நிலைதான் உருவாக போகுதுன்னு முன்னாள் தலைவர் முருகன் முதல் அண்ணாமலை வரை அடிக்கடி குண்டை தூக்கி போட்டுக்கிட்டே இருக்கிறாங்க..
அதற்கான காய் நகர்த்தலிலும்தான் அவர்கள் ஈடுபட்டும் வர்றாங்க.. பாரம்பரியம் மிக்க கட்சியான அதிமுகவுக்கு இது உச்சக்கட்ட அவமானமாகவும் உள்ளது..அதிமுக தொண்டர்கள் கொதிச்சுப் போய் இருக்கிறாங்க.காலம் காலமாக திமுக Vs அதிமுகன்னுதான் இந்த தமிழ்நாடு தேர்தல்களை சந்திச்சு கிட்டு வருதுன்னாலும், பாஜக தமிழகத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும், அதிமுகாவால தடுக்க முடியலை.. இப்போதே வரப்போகும் எம்பி தேர்தலுக்கு பாஜக குறி வைத்து விட்டது.. அதற்கான சில திட்டங்களையும் தமிழக பாஜக கையில் எடுத்திருக்காங்க… கிராமப்புறங்களில் பாஜகவுக்கு அவ்வளவாக வலு இல்லைங்கிற பேச்சு பரவலாக இருக்குது.. இப்படிப்பட்ட சூழல்லதான், கிராமப்புறங்களில் காலூன்ற தன் கவனத்தை திருப்பி வருகிறது.. அதேபோல, டெல்டா விவசாயிகளின் கவனத்தை ஈர்க்கவும் முயற்சி எடுத்துள்ளது.. ஏற்கனவே, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து, அண்ணாமலை தலைமையில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதைதவிர, வருகிற 25ம் தேதி ஒருநாள் முழுவதும் விவசாயிகளை பாஜவினர் நேரில் சந்தித்து பேசுவாருன்னும் அப்போ வேளாண் சட்டம் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் வேணும்மென்றே அரசியல் செய்வதால், அந்த சட்டம் குறித்து மக்களிடம் விளக்கமாக எடுத்துரைப்போம்னு சொல்லிகிட்டு வர்றாங்க.
அண்ணாமலை இப்படி சொல்றதிலேருந்து 2 விஷயங்களக் கவனிக்கணும்.. ஒன்று, விவசாயிகளுக்கு எதிரானது பாஜகங்கிற பிம்பம் இருக்கிறதால அதை உடைக்கும் முயற்சியாவே இது பார்க்கப்படுது. மேலும் விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி திமுக அல்ல, நாங்கள்தான் என்பதை வலிய புகுத்த நினைப்பதாகவும் கருதப்படுகிறது.. மற்றொன்று, டெல்டாவில் எப்போதுமே திமுகவுக்கு ஆதரவு அதிகம்.. கொங்கு கைவிட்டாலும் டெல்டா ஒருபோதும் திமுகவை கைவிட்டதில்லை.. அந்தவகையில், ஒரு மண்டலத்தை மொத்தமாக தன் பக்கம் திருப்பி வாக்குகளாக மாற்றும் பிளானைத்தான் பாஜக எடுத்துள்ளது.. அதேசமயம், எங்கெல்லாம் திமுகவை டேமேஜ் செய்ய முடியுமோ, அங்கெல்லாம் மறக்காமல் அக்கட்சியை விமர்சித்து வருவதையும் கைவிடவில்லை. வெள்ளை அறிக்கை முதல் பட்ஜெட் வரை, ட்வீட் போட்டு தாக்கி கொண்டுதான் இருக்கிறது.இந்த நேரத்தில கூட, வேலூரில் அண்ணாமலை என்ன பேசுனார்னா, “உள்ளாட்சித்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் நோக்கத்தில் பணியாற்ற வேண்டும், பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக தான் அரசியலை செய்கிறோம்…
2024-ல் எம்பி தேர்தலில் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய எந்த பெரிய கட்சியும் இங்கு கிடையாது.. மாநில கட்சிகளான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மற்றும் ஸ்டாலினின் திமுக போன்ற கட்சிகள் தேசிய கட்சியாகும் நோக்கத்தில் இருக்குது. குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கனவு காண்றாரு.. இந்தியாவின் துணை பிரதமராக தான் ஆகிவிட்டு, தனது மகன் உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வராக்க வேண்டுமென காய் நகர்த்தி வருகிறார்னு அண்ணாமலை பேசியதில் மீண்டும் அதே விஷயத்தை கவனித்தால் புரியும்.. திமுகவை மறக்காமல் டேமேஜ் செய்துள்ளதுடன், திமுகவுக்கு மாற்று பாஜக என்பதிலும் குறியாக இருப்பது தெரிகிறது.. அதிமுக அதுமட்டுமல்ல, ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலையே செய்கிறோம் என்பதை வெளிப்படையாகவே சொல்லி உள்ளதை திமுக கவனித்ததோ இல்லையோ, அதிமுக உன்னிப்பாக கவனித்திருக்கும் என்றே தெரிகிறது.. ஏனெனில், டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 41 தொகுதிகளில் 37 இடங்களில் வென்று திமுக டெல்டா மாவட்டங்களை தனது கோட்டை ஆக்கியுள்ளது. இது அதிமுகவுக்கு ஷாக்தான்.. எனவே, டெல்டாவை பலப்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே மா.செ.க்களிடம் வலியுறுத்தியும் உள்ளார். வரப்போகும் தேர்தலில் டெல்டாவில் வாக்குகளை பெருக்க, திமுகவும், அதிமுகவும் வேறு வேறு வகைகளில் திட்டமிட்டு வரும் நிலையில், அத்தனை மொத்த கணக்குகளையும் பாஜக தவிடுபொடியாக்கி விடுமா? பாஜகவின் முன்னெடுப்புகளை திமுக முறியடிக்குமா? அல்லது அதிமுக சொந்த பிரச்சனையில் இருந்து விலகி, டெல்டாவில் கவனம் செலுத்துமா? தெரியலை.. பார்ப்போம்..! பலன் தருமா? அதேசமயம், பாஜகவுக்கு இது எந்த அளவுக்கு வெற்றியை பெற்று தரும் என்றும் சொல்வதற்கில்லை.. காரணம், பாஜக நினைத்ததை இதுவரை அப்படியே சாதிக்க முடியவில்லை, தேர்தலுக்கு முன் முன்னெடுத்த வேல் யாத்திரை, மேகதாது உண்ணாவிரதமும் பிசுபிசுத்து போனது… அதுவும் இல்லாமல், அண்ணாமலை பேசுவதை, சொல்வதையெல்லாம் அவர்கள் கட்சிக்காரர்கள் எந்த அளவுக்கு கடைபிடிப்பார்கள் என்றும் தெரியாது. எல்.முருகன் மற்றொரு பக்கம் தனியாக யாத்திரை தொடங்கப் போகிறார். கடந்தமுறை டெல்டாவில் பெரிதாக சாதிப்போம் என கருப்பு முருகானந்தம் முதல் பலரும் முயற்சி செய்ததும் நிறைவேறவில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது.